
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், இஸ்லாமிய மாணவிகள் வகுப்பில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்புக்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. மேலும் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்துள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடக இஸ்லாமிய மத குரு மவுலானா சாகிர் அகமதுகான் ரசதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அத்தியாவசியமாக பின்பற்றப்படுவது இல்லை என்று கூறப்பட்டுள்ளது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் இன்று முழு அடைப்பு நடத்த முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். முழுஅடைப்பையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.