
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதால் பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்திக்காக அனல்மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் மின் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியால் கொழும்பு நகரில் நாள் ஒன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர். அங்கிருந்த தடுப்பு வேலிகளை அகற்றிய அவர்கள் ராணுவ வாகனத்திற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் முற்றுகை போராட்டம், வன்முறையாக மாறியது. இதனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர். இந்த போராட்டம் காரணமாக கொழும்புவில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
இதையடுத்து கொழும்பு நகரின் வடக்கு, தெற்கு, மற்றும் மத்திய நுகேகொட காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.