
கடந்த வார தொடக்கத்தின் போது, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் சிஇஓ-வான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2% பங்கை தன்வசம் ஆக்கினார். 9.2% பங்கை வாங்கியதால் எலான் மஸ்க்கிற்கு ட்விட்டரில் அவருக்கு சில சலுகைகள் கிடைக்கும் என்று பேச்சு அடிப்பட்டது.
ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிற ரீதியில் ட்விட்டர் நிறுவனம் பதில் அளித்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இடம் பெற்றாலும் கூட, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்கிற்கு ட்விட்டர் பிளாட்ஃபார்மில் 'ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்' எதுவும் அளிக்கப் போவதில்லை என்று ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து ட்விட்டர் செய்தி தொடர்பாளர் அட்ரியன் ஜமோரா, தெரிவிக்கையில் "ட்விட்டர் தளமானது அதன் கொள்கைகள் மற்றும் விதிகளின் வளர்ச்சி மற்றும் அமலாக்கத்தில் பாரபட்சமற்ற தன்மைக்கு உறுதிபூண்டுள்ளது" என்று கூறி உள்ளார். இதிலிருந்து எலான் மஸ்க்கும் மற்றவர்களை விதிகளுக்கு உட்படுவார் என்பது தெளிவாகிறது.
ஆனால் ட்விட்டர் பிளாட்ஃபார்மில் எலான் மஸ்க்கிற்கு உள்ள செல்வாக்கை வைத்து பார்க்கும் போது, ட்விட்டரின் கொள்கைகள் குறித்து வாரிய உறுப்பினர்களால் எந்த முடிவையும் எடுக்க முடியாது, ஆனால் வழிகாட்டுதல் மற்றும் கருத்துக்களை முன்வைப்பதில் அவர்களுக்கு எப்போதும் பெரிய பங்கு உண்டு என்பதையும் ஜமோரா குறிப்பிட்டு உள்ளார்.
எங்கள் கொள்கை முடிவுகள் வாரியம் அல்லது பங்குதாரர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதையும் ஜமோரா மேற்கோள் காட்டினார். "எங்கள் சேவையின் முழுமையில், ஆலோசனை மற்றும் கருத்துக்களை வழங்குவதில் எங்கள் வாரியம் எப்போதுமே ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது.
ஆனாலும் எங்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் ட்விட்டர் நிர்வாகம் மற்றும் ட்விட்டர் பணியாளர்களாலேயே எடுக்கப்படுகின்றன" என்றும் ஜமோரா கூறி உள்ளார்.
எலான் மஸ்க்கிற்கு ட்விட்டரில் உள்ள செல்வாக்கை பொறுத்தவரை, அதிகம் பேர் ஃபாலோ செய்யும் பிரபலங்களின் டாப் 10 பட்டியலில் எலான் மஸ்க்கும் உள்ளார். ட்விட்டரில் இவரை மொத்தம் 80.3 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள், குறிப்பிட்ட பட்டியலில் எலான் மஸ்க் 8 வது இடத்தில் உள்ளார்.