
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு ஏதேனும் திட்டங்களை வகுத்து உள்ளதா? நாட்டில் இயக்கப்படும் மொத்த வாகனங்களில் எலக்ட்ரிக் வாகனங்களை எண்ணிக்கை தொடர்பாக மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜார், நாட்டில் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் எரிபொருள் பயன்பாடு உள்ளிட்டவற்றை பெருமளவு குறைக்க எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12% லிருந்து 5% ஆகவும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யப்படும் முறையின் போது வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி 18% லிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பில் நாடு முழுவதும் 27,79,76,523 வாகனங்கள் இயக்கத்தில் உள்ளது. இதில் 1,051,202 வாகனங்கள் மட்டுமே எலக்ட்ரிக் வகை வாகனங்கள் ஆகும். இதில், 3,36,924 இருசக்கர எலெக்ட்ரிக் வாகனமும், 675,977 ஆட்டோ உள்ளிட்ட மூன்று சக்கர வாகனங்கள், 27,930 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 3,013 கனரக வாகனங்கள் என மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர 7,358 எலக்ட்ரிக் வாகனங்கள் இதர பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.