
2022 - 2023ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை ரிப்பன் மாளிகை மன்ற அரங்கில் விவாதத்திற்குப் பிறகு பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, 2022-23 ம் நிதி ஆண்டில், வருவாய் மற்றும் மூலதன வரவு 6ஆயிரத்து 384 கோடி வருவாயாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம், செலவு 6747 கோடி எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 363 கோடி அளவு பற்றாக்குறை பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் உள்ளது என்றார்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 554 கோடி பற்றாக்குறையாக இருந்தது , இந்த ஆண்டு பற்றாக்குறை அளவு குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் சொத்து வரி வசூல் மூலம் கணிசமாக மாநகராட்சி வருவாய் உயர்ந்துள்ளது.
அம்மா உணவகம் திட்டம் தொடரும் என சட்டமன்றத்தில் அமைச்சர்கள் எற்கனவே தெரிவித்துள்ளனர். சென்னையில் அந்த திட்டம் தொடரும் எனவும், சொத்து வரி கணிசமாக வசூலித்தும் தற்போது வரை மாநகராட்சியில் வருவாய் பற்றாக்குறையே இருக்கிறது , மும்பை , பெங்களூரு , கொல்கத்தா , புனே போன்ற மற்ற மாநில பெருநகரங்களை ஒப்பிடும்போது சென்னையில் உயர்த்தப்பட்ட பிறகும் சொத்து வரி குறைவாகவே உள்ளது என்ற அவர், 1998 ம் ஆண்டுக்கு பிறகு சென்னை மாநகர எல்லைப் பகுதியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை , எனவேதான் புறநகர் பகுதியை காட்டிலும் , மாநகரப் பகுதியில் சொத்து வரி தற்போது கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அறிவியல்பூர்வமாக செலவு செய்ய வேண்டும் , சென்னையில் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் , தமிழகத்தின் பெருமைமிகு தலைநகராக சென்னை இருக்கிறது , எனவே வளர்ச்சிப் பணிகள் தொடர்வது அவசியம் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி வள்ளுவர் கோட்டம் , கோயம்பேடு - மாதுரவாயல் சாலை , ஆலந்தூர் , கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் காலனி , ஓட்டேரியில் பாலங்கள் கட்டப்பட உள்ளன. கணேசபுரம் மேம்பாலம் , உஸ்மான் சாலைப் பகுதியிலும் மேம்பாலப் பணிகள் நடைபெற உள்ளன எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,
வட சென்னையில் இயங்கும் தொழிற்சாலைகள் குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்தான் நடவடிக்கை எடுக்க முடியும், சென்னையில் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக ஏற்கனவே 91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
500 கோடி ரூபாய் சிங்காரச் சென்னை நிதியாக தமிழக அரசு சென்னை மாநகராட்சிக்கு வழங்க உள்ளது. சென்னை மாநகராட்சியின் கடன் தொகை 2500 கோடியளவில் இருக்கலாம் என்றார்.
மக்கள் பிரதிநிதிகள் தேர்வாகிவிட்டதால் , பட்ஜெட்டுக்கு முன்பாக பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படவல்லை. முன்னர் அதிகாரிகள் மட்டுமே இருந்ததால் பொதுமக்கள் கருத்து கேட்டு பட்ஜெட் தயாரித்தோம் எனவும், மாமன்ற உறுப்பினர்கள் கூறுவதை அதிகாரிகள் கேட்டு நடக்க வேண்டும் , சில மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர் , அது குறித்து கவனமாக பரிசீலிப்போம் என தெரிவித்தார்.