
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் இன்று முதல் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளநிலையில் தனியார் மருத்துவமனை வசூலிக்கும் கட்டண விவரத்தை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து இருந்த போது தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. குறிப்பாக, கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. முதலில் முன்களப்பணியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு, பின்னர் 40 வயதினருக்கு மேற்பட்டோருக்கு விரிவுபடுத்தப்பட்டது.
அதன்பின் 18வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக அரசு சார்பில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா அலையின் தீவிரம் அதிகரித்ததைத் தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசியை மத்திய அரசு கொண்டுவந்தது. முதலில் முன்களப்பணியாளர்களும், மருத்துவர்களும் 60வயதுக்கு மேற்பட்டவர்களும் செலுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டனர். அதன்பின் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் 18 வயது நிரம்பிய அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை வரும் 10ம் தேதி முதல் தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக்கொள்ளவும் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது ஆனால், 2-வது தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களுக்குப்பின்புதான் பூஸ்டர் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது. மேலும், தடுப்பூசி செலுத்தும் சேவைக் கட்டணமாக தனியார் மருத்துவமனைகள் அதிகபட்சமாக ரூ.150 மட்டுமே வசூலிக்க வேண்டும். தடுப்பூசி மருந்தின் விலையிலிருந்து அதிகபட்சமாக ரூ.150 மட்டுமே சேவைக்கட்டனம் வசூலிக்க வேண்டும் தெரிவித்துள்ளது.