
உக்ரைனில் போர் நடப்பதால் கடந்த 2 வாரங்களாக இந்திய அரசு சிறப்பு விமானங்கள் இயக்கி உக்ரைன் அண்டை நாடுகள் வழியாக இந்தியர்களை டெல்லி, மும்பை நகரங்களுக்கு அழைத்து வந்தன. தமிழகத்திற்கு 9வது நாளாக 9 விமானங்களில் சென்னை, திருச்சி, கோவை உள்பட பல பகுதிகளை சேர்ந்த 169 மாணவ- மாணவிகள் டெல்லியில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.
மேலும் தமிழக அரசின் சிறப்பு குழு முயற்சியில் டெல்லியில் 3வது நாளாக தனி விமானம் முலம் மாணவர்கள் வந்தனர்.
சென்னை விமான நிலையம் வந்த மாணவர்களை தமிழக அரசின் அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்று பெற்றோரிடம் ஒப்படைத்தார். மாணவர்களை கண்டதும் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கட்டி பிடித்து கண்ணீர் மல்க வரவேற்றனர். பின்னர் சொந்த ஊருக்கு அரசு செலவில் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியை சேர்ந்த அருளானந்தன் உக்ரைனில் இருந்து வந்தார். அவரை அவரது தாய் தீபாகுமாரி மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். பின்னர் மாணவர் அருளானந்தன், தாய் தீபாகுமாரி ஆகியோர் உக்ரைனில் உணவின்றி தவிக்கும் மாணவர்களுக்கு உதவிட ரூ.25 ஆயிரம் நிதியை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் வழங்கினார்கள்.