
சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது, பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், போடிபாளையம் ஊராட்சி புதுக்காலனியில் பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு நில அளவை வழஙகப்படுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், அப்பகுதி மக்கள் வெளி நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டதாக கூறியதால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதாகவும், சட்டமன்ற உறுப்பினர் அப்பகுதி மக்களிடம் பேசி பிரச்சனைக்கு தீர்வு கண்டால் நில அளவை செய்து தரப்படும் என கூறினார். மேலும், மூதாதையர்களாக இருக்கும் வாரிசு தாரர்களுக்கு பட்டா மாறுதல் வழங்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் மீண்டும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர், வாரிசுதாரர்கள் பட்டா மாறுதல் செய்வதில் சில பிரச்சனை இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், முதலமைச்சர் கடந்த ஆண்டு மற்றும் நடப்பாண்டில் 3 லட்சம் பட்டாக்கள் வழங்க அறிவுறுத்தியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்