
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இயங்கி வரும் சில தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், கல்வி நிறுவனங்கள் அரசு அலுவலகங்கள் மருத்துவமனைகள் ஆகிய அனைத்து அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பொது மக்களுக்கு வேலை நிறுத்தங்கள் இடையூறை ஏற்படுத்தும்.
இந்த நிலையில், போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 28, 29 ஆகிய தேதியில் எந்த விதமான விடுப்பும் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும்
ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிக்கு வருகை தரவில்லை எனில் 'ஆப்செண்ட்' மார்க் செய்யப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் பணிக்கு வருகை தராமல் இருக்கும் பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.