
கொரோனாவின் தொடர்ச்சியான தாக்கம், அதன் விளைவாக ஏற்பட்ட நிதி பற்றாக்குறை காரணமாக, தமிழ்நாடு விடுப்பு விதிகள், 1933, விதி 7(ஏ)-ன் கீழ் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பை பணமாக பெற்றுக் கொள்ளும் வசதி 31.3.2022 வரை நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது அரசு இதை கவனமுடன் பரிசீலித்து, தமிழ்நாடு விடுப்பு விதிகளின்படி, ஈட்டிய விடுப்பை பணமாக பெறும் வசதி மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாகவும், இது அனைத்து மாநில நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், பல்கலைக்கழகங்கள், ஆணையங்கள், நிறுவனங்கள், சங்கங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு விடுப்பு விதிகள், 1933-ன் விதி 7(ஏ)-ல் தேவையான திருத்தம் தனியாக மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்படும் என்றும், மனித வள மேலாண்மை துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.