
தமிழ்நாடு கூடைப்பந்து கழகமும் தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகமும் இணைந்து 16 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியருக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி அடுத்துள்ள சாயர்புரம் விகாசா பள்ளி மைதானத்தில் கடந்த 18ஆம் தேதி துவங்கி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்றது.
ஆண்கள், பெண்கள் என மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டு லீக் முறையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு ஆண்கள் பிரிவில் தூத்துக்குடி, தேனி அணிகளும், பெண்கள் பிரிவில் சென்னை, திண்டுக்கல் அணிகள் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதி பெற்றன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆண்கள் பிரிவில் தூத்துக்குடி மாவட்ட அணியும் தேனி மாவட்ட அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி 59:36 என்ற புள்ளிகள் எடுத்து தேனி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
முன்னதாக நடைபெற்ற பெண்களுக்கான இறுதி ஆட்டத்தில் சென்னை அணியும் திண்டுக்கல் அணிகள் மோதின. இதில் சென்னை அணி 45:32 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் செயலாளர் அசிஸ் அகமது, காவல் ஆய்வாளர் ரமேஷ், ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்கள். இந்த போட்டிகளை ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.