
ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீரர்கள் ருத்ராங்ஷ் பாலசாஹிப் பட்டீல், அபினவ் ஷா இறுதிபோட்டிக்குள் நுழைந்தனர்.
விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் ருத்ராங்ஷ் பாலசாஹிப் பட்டீல் 17-13 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அபினவ் ஷா வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். ஜெர்மனி வீரர் நில்ஸ் பால்பெர்க் வெண்கலப்பதக்கம் பெற்றார்.
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை ரமிதா 8-16 என்ற புள்ளி கணக்கில் நடப்பு ஜூனியர் உலக சாம்பியனான பிரான்சின் ஓசியன் முல்லெரிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
இந்த போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், 2 வெள்ளி என மொத்தம் 3 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.