
ஐ.பி.எல் போட்டியில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சிறந்த அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்கிறது. வேறு எந்த அணியும் சாதிக்காத வகையில் சி.எஸ்.கே. 9 முறை இறுதி போட்டிக்கு நுழைந்து சாதனை படைத்துள்ளது. இதில் 4 தடவை ஐ.பி.எல் கோப்பையை வென்று மும்பைக்கு அடுத்த படியாக உள்ளது.
ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. அதில் முதல் வீரராக ஜடேஜாவை தக்கவைத்தது. இதனால் டோனி கேப்டன் பதவியில் நீடிப்பது குறித்து விவாதம் எழுந்தது.
அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டோனி கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவித்தது. நாளைமறுதினம் ஐ.பி.எல். 2022 சீசன் தொடங்குகிறது. இந்த நிலையில், இன்று டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார். கேப்டன் பதவியில் இருந்த விலகினாலும் வீரராக அணியில் இடம் பிடித்து விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5-வது முறையாக ஐ.பி.எல் கோப்பையை சி.எஸ்.கே. வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகி இருப்பதால், கோப்பையை வெல்லுமா... என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. இருப்பினும் புதிய கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜடேஜா தலைமையில், சி.எஸ்.கே.வின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமாகவும் இருக்கிறார்கள்.