
இந்த ரோவரானது செவ்வாய் கிரகத்தில் பல தகவல்களையும், அரிய புகைப்படங்களையும் சேகரித்து பூமிக்கு அனுப்பி வருகிறது. இதில், சிவப்பு கிரகம் எனப்படும் செவ்வாய் கிரகத்தில் ஒலியின் வேகம் பற்றிய விவரங்களை விஞ்ஞானிகளுக்கு இந்த பெர்சவரன்ஸ் ரோவர் தெரிவித்து உள்ளது. செவ்வாயில் ஒலியின் வேகம் பற்றி சர்வதேச ஆய்வாளர்கள் கொண்ட குழுவானது ஆய்வில் ஈடுபட்டது.
இந்த ரோவரில் இருந்து ஒலி அலைகள் வெளியேறி சென்று, பின்பு ரோவரின் மைக்ரோபோனுக்கு திரும்பி வரும் கால அளவு ஆய்வாளர்களால் கணக்கிடப்பட்டது. இந்த ஆய்வில், செவ்வாயில் ஒலியானது ஒரு வினாடிக்கு 240 மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்வது தெரிய வந்தது. ஆனால், நாம் வாழ கூடிய பூமியில், காற்றின் வழியே பயணம் செய்யும் ஒலியானது ஒரு வினாடிக்கு 343 மீட்டர் அல்லது 2.9 வினாடிகளுக்கு ஒரு கிலோ மீட்டர் வரை செல்கிறது. இதனால், செவ்வாயில் ஒலியின் வேகம் குறைவது தெரிய வந்துள்ளது
எடுத்துக்காட்டாக, 2 பேர் செவ்வாயில் பேசி கொள்கிறார்கள் என்றால், ஏற்ற இறக்கங்களுடன் கூடிய அவர்களது பேச்சு வேறு வேறு நேரங்களில் அவர்களை சென்றடையும். இதனால், செவ்வாய் கிரகத்தில் மனிதர்களின் பேச்சு அவர்களுக்கு குழப்பம் தரும் வகையில் சென்று சேரும் என தெரிய வருகிறது.
செவ்வாயில் வெப்பநிலைக்கு ஏற்ப விரைவான மாற்றங்கள் ஏற்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இதற்காக ஒவ்வொரு முறையும் ரோவரில் இருந்து ஒலி அலைகளை வெளியேற செய்து அதன் வேகம் அளவிடப்பட்டு உள்ளது. செவ்வாயில் வேறு என்ன மறைவான விசயங்கள் உள்ளன என ஆய்வு செய்யும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.