
தமிழ்நாடு சுற்றுலா துறையும் Global media box innovation pvt Ltd தனியார் அமைப்பும் இணைந்து தமிழ்நாடு சுற்றுலா தலங்களை சிறந்த முறையில் ஒளிப்பதிவு மற்றும் புகைப்பட போட்டி நடத்தியது. இதில் இந்தியா முழுவதும் ஏராளமான புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு கலைஞர்கள் பங்கேற்று தங்கள் படைப்புகளை சமர்ப்பித்தனர்.
பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் 2021ஆம் ஆண்டுக்கான வாவ் தமிழ்நாடு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் மதி வேந்தன் சுற்றுலா துறை முதன்மை செயலாளர் சந்திர மோகன், சுற்றுலாத் துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி பங்கேற்றனர்.`
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள நாம் சுற்றுலா துறை சார்பில் பல நிகழ்ச்சிகளை கொண்டு வந்து மக்களை ஈர்த்து வருகிறோம். வரும் காலங்களில் தீவு திடல் உள்ளிட்ட பல இடங்களில் சுற்றுலா துறை சார்பில் பல நிகழ்சிகள் நடைபெற உள்ளது,
விரைவில் அது குறித்து மக்களுக்கு தெரியவரும். வருடா வருடம் சுற்றுலா தலங்களை மேம்படுத்த உள்ளோம், இந்த வருடம் எந்த சுற்றுலா தலம் மேம்படுத்த உள்ளோம் என்பதை நடக்கவிருக்கும் சுற்றுலா துறை மானிய கோரிக்கையின் போது தெரிய வரும். மே 5 ஆம் தேதி சுற்றுலா துறை மானிய கோரிக்கையின் போது முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவித்தார்.