
பாரதிய ஜனதா கட்சியின் 42வது நிறுவன நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் மற்றும் தலைவரிடம் காணொலிக் காட்சி வாயிலாக உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், அசாத்தியமான வளர்ச்சியை பாரதிய ஜனதா கட்சி அடைந்துள்ளது என்றால் அதற்கு காரணம் பாஜகவின் ஒவ்வொரு தொண்டன் தான் என பேசிய பிரதமர் சமீபத்தில் 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளதாகவும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குட்ச் முதல் கோகிமா வரை பாஜக தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சி ஒற்றுமையான இந்தியாவின் பாதையை நோக்கி கொண்டு செல்வதாகவும், பாஜக மீது வைத்திருக்கக்கூடிய மரியாதையும் புகழும் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்வதாக கூறினார். மேலும், இந்த ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தினம் நமக்கு மிக மிக முக்கியமானது! அதற்கான முதல் காரணம் இந்த ஆண்டு 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்ட ஆண்டு, மாறிவரும் உலகச் சூழல் இந்தியாவிற்கு சாதகமாக இருப்பது இரண்டாவது காரணம் மற்றும் மூன்றாவது காரணம் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களில் மீண்டும் நாம் ஆட்சியை பிடித்தது என பட்டியலிட்டு பிரதமர் மோடி பேசினார்.
கொரோனா பெருந்தோற்று பரவலின் போது உலக நாடுகள் கடுமையான சரிவை சந்தித்த போதிலும் இந்தியா அதன் வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதற்கு உதாரணம் 400 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ஏற்றுமதியினை செய்திருக்கிறோம்; இது கடினமான காலத்திலும் இந்தியாவுடைய தன்னிகரில்லாத தன்மையை காட்டுகிறது. மேலும் இந்தியாவில் 80 கோடி ஏழை மக்களுக்கு கஷ்டமான சூழலிலும் இலவச ரேஷன் வழங்கப்படுகிறது எனவும் ஏழைகள் யாரும் பசியுடன் உறங்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசு 3.5 லட்சம் கோடி ரூபாய் செலவினம் செய்து வருகிறது என்றார். அரசின் சலுகைகள் கடைக்கோடியில் உள்ள குடிமகனுக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும் என பாஜாகவினரிடம் கேட்டு கொண்டார்.