
சமீபத்தில் டெல்லி பயணம் மேற்கொண்டிருந்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற சந்திப்பின்போது வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை இரண்டு நாள் பயணமாக இன்று மாலை டெல்லி வருகிறார். டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை இன்று மாலை 7 மணிக்கு சந்திக்கவுள்ள முதலமைச்சர் பசவராஜ் மேகதாது திட்டம் மற்றும் அப்பர் கிருஷ்ணா திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளார். இந்த ஆலோசனையின் போது கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் எம். கார்ஜோலும் உடன் இருப்பார் என கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனை தொடர்ந்து நாளை காலை மத்திய வனத்துறை அமைச்சரை சந்தித்து மேகதாது அனைத்து கட்ட உரிய அனுமதி வழங்க கோரி கோரிக்கை முன்வைக்க உள்ளார் என கூறப்படுகிறது. காரணம் 2023ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பதே பசவராஜ் பொம்மையின் இலக்காக உள்ளது. அதன் அடிப்படையில் மத்திய அமைச்சரை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
2023 தேர்தலுக்கான பணிகளை காங்கிரஸ் இப்போதே கர்நாடக மாநிலத்தில் தொடங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மேகதாது அணை கட்டப்படும் என மக்களிடம் வாக்குறுதி அளித்திற்கும் நிலையில் இவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பின்னடைவாக மாறிவிடும் என்பதால் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி காலத்திலே மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கவேண்டும் என சமீபத்தில் கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பசவராஜ் பேசிய நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடி என பலரையும் சந்திக்க உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசும்போது மேகதாது அணைக்கு உடனடியாக அனுமதி அளிப்பது தொடர்பான கோரிக்கையை முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை முன் வைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.