
சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி வாயிலாக ஆண்டுக்கு 700 கோடி ரூபாய்; தொழில் வரி வாயிலாக 350 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. மேலும், இதர வரிகள் வாயிலாக 1,600 கோடி ரூபாய் என, ஆண்டுக்கு மொத்தம் 2,650 கோடி ரூபாய் வசூலாகிறது. இதில் மாநகராட்சியில் உள்ள 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு 1,300 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாக பணிகளுக்காக, 40 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதர வருவாய் மற்றும் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதிகளில் இருந்தும், உலக வங்கி, ஜிகா உள்ளிட்ட வங்கிகளிடமிருந்தும் பெறப்படும் கடன்கள் வாயிலாகவே வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி, மாநகராட்சியின் நிகர கடன் தொகை தற்போது, 800 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. இதற்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வட்டி கட்டப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் புதிதாக சொத்து வரி உயர்வால் கூடுதலாக பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். சென்னை மாநகராட்சியின் வரவு செலவு திட்டம் சமர்பிப்பதற்கான மாமன்ற கூட்டம் வரும் 9ம் தேதி காலை 10மணிக்கு கூடுகிறது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 2022-23ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது