
நில அபகரிப்பு வழக்கில் ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஐந்தாவது முறையாக காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
திமுக அரசானது இந்திய அரசியலமைப்பு சட்டம் 356 நோக்கி வேகமாக சென்று கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் சந்தேகமான முறையில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும்,
அவர்கள் விசாரித்து உரிய நபர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தால் மட்டுமே லாக் அப் மரணங்கள் தடுக்கப்பட முடியும் எனவும் போலீசார் விசாரித்தால் அவர்களுக்கு ஆதரவாக தான் அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் மக்கள் விரோத செயல் குறித்து அதன் தோழமை கட்சிகள் குரல் கொடுக்கவில்லை எனவும் இதை மக்கள் ஒரு போதும் விரும்பமாட்டார்கள் என அவர் கூறினார்.
எடப்பாடி பழனிச்சாமி எனது காரை எடுத்துக்கொண்டு செல்லலாம் ஆனால் கமலாலயம் செல்ல வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் கருத்திற்கு பதிலளித்த ஜெயக்குமார், உதயநிதி ஸ்டாலின் அவரது காரை எடுத்துக்கொண்டு இலங்கைக்கு எடுத்து செல்லுமாறும், அங்கு 1.5 லட்சம் இலங்கை தமிழர்களின் ஆவி அவரை சும்மா விடாது என அவர் கூறினார்.
செயற்கையான மின்சார தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டு, மத்திய அரசின் மீது திமுக அரசு பழி போடுவதாக தெரிவித்துள்ளார். 2113 கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களை இருட்டுக்குள் தள்ளி கஷ்படுத்தும் இந்த பாவம் சும்மா விடாது என அவர் தெரிவித்துள்ளார்.