
தமிழகத்தில் கோடைக்கால தொடங்கியதை அடுத்து மின்சார தேவையும் அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு அனைத்து மின் உற்பத்தி நிலையங்களிலும் முழு உற்பத்தி திறனுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், 5 யூனிட்டுகளில் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மொத்தமுள்ள 5 யூனிட்களில் 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டன. மேலும் 2 யூனிட் மட்டும் செயல்பட்டது. இதனால் தினமும் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது நிறுத்தப்பட்டது.
தமிழகத்திற்கு தேவையான நிலக்கரி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியது. இதை அடுத்து இன்று 29,000 டன் நிலக்கரி வந்ததையடுத்து, மேலும் 2 அலகில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. தற்போது 1,2,3 ஆகிய மூன்று அலகுகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவுக்கு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், நேற்று 28/04/22 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 387.047 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெகாவாட் அளவில் 17,370 மெகா வாட். இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது.
இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு மார்ச் 2022 இறுதியில், 378.328 மில்லியன் யூனிட் அல்லது 17,196 மெகா வாட் என்று தெரிவித்துள்ளார். கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் மின் பயன்பாடு வரலாற்றில் இல்லாத அளவிற்கு பதிவாகியுள்ளது.