
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள் என 150 க்கும் அதிகமானோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆணைய தரப்பும் சசிகலா தரப்பும் விசாரணையை நிறைவு செய்துள்ள நிலையில் அப்பல்லோ மருத்துவர்களிடம் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் மறுவிசாரணை செய்யக்கோரியதால் 11 மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி இன்று அப்பல்லோ மருத்துவர்கள் தவபழனி மற்றும் செந்தில்குமார் ஆகிய இரு மருத்துவர்கள் இன்று ஆஜராகினர். சிகிச்சை வழங்கும் போது ஜெயலலிதா தனக்கு நன்றி தெரிவித்ததாக எய்ம்ஸ் மருத்துவர் கிலானி அளித்த வாக்குமூலத்தின் படி மருத்துவர் செந்தில்குமாரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த மருத்துவர் செந்தில்குமார், ஜெயலலிதா சுய நினைவில்லாமலே மருத்துவமனையில் இருந்ததாகவும், மருத்துவர் கிலானிக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்தது பற்றி தனக்கு தெரியாது எனவும் செந்தில்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாளைய தினம் அப்பல்லோ மருத்துவர்கள் நரசிம்மன், பால் ரமேஷ் ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த கட்ட விசாரணை வரும் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது