
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மே தின சிறப்பு பொதுக்கூட்டம் பழனியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முத்தையா தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் வளர்மதி, ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கண்ணன், தலைமை கழக பேச்சாளர் மலைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழனி நகர அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராம்பாபு வரவேற்றார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அப்போது, சாதி, மதத்தை கடந்து அனைத்து தரப்பினரும் கொண்டாடுவது மே தினம் மட்டுமே. அதனால் தான் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நலித்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
இங்கு சிலர் தொழிலாளர் நலனுக்காக என்று சொல்லி அவர்களிடமே பணம் வசூலிக்கின்றனர்.மின்வெட்டு மாநிலம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் எல்லாம் தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளன. தேர்தலின் போது நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து, மகளிர் உரிமைத்தொகையாக ரூ.1000 என பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றினர்.
குறிப்பாக நீட் தேர்வு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, அரசியலமைப்பு சட்டம் ஆகியவற்றை மனதில் கொள்ளாமல் திட்டமிட்டே மக்களை ஏமாற்றுகிறார்கள்.
மேலும் சட்டமன்றத்தில் பண்பாடற்ற முறையில் ரவுடிகளை போல் சில அமைச்சர்கள் செயல்படுகின்றனர். உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்டது மத்திய அரசு.
ஆனால் மு.க.ஸ்டாலின் தான் மீட்டது போல மக்களை நம்ப வைக்கிறார்கள். கடந்த ஆட்சியில் மின்மிகை மாநிலமாக தமிழகம் இருந்தது. தற்போது மின்வெட்டு மாநிலமாக மாறியுள்ளது. ஆனால் மின்வெட்டு பிரச்சினைக்கு மத்திய அரசை குறை சொல்லி சந்தர்ப்பவாத அரசியலை தி.மு.க. அரசு செய்கிறது என்று தெரிவித்தார்.