
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை எதிர்த்து, வரும் 25 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக மார்க். கம்யூ. கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூட்டாக அறிவித்துள்ளனர்.
சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம். பி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய கே.பாலகிருஷ்ணன், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை எதிர்த்து, மிகப்பெரிய இயக்கம் நடத்தப்பட உள்ளது. வரும் 25 முதல் 31ம் தேதி வரை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்டவற்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல், டீசலில் ஒரு சிறிய அளவை குறைத்து உள்ளனர்.
மத்திய அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 200% வரியை உயர்த்திவிட்டு, அதில் 6% மட்டுமே குறைப்பது சரியாக இருக்காது. முழுமையாக செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும். அதேபோல் வட மாநிலங்களில் கோதுமை பெரிய பிரச்சனை உள்ளது. தமிழகத்திலும் அதுபோன்று நியாயவிலை கடையில் அரசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. வேலைவாய்ப்பு இல்லாமல், இளைஞர்கள் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
அதுமட்டுமின்றி மத்திய அரசின் தவறுதல் காரணமாக பஞ்சு விலையும் உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் 12 ஆயிரம் அளவிற்கு பருத்தி விலை உயருகிறது. மத்திய அரசு பருத்தியை சேமிக்காமல், தனியார் நிறுவனங்களுக்கு விற்றுள்ளது தான் இதற்கு காரணம். பொருளாதாரத்தில், கார்ப்பரேட்டை காப்பாற்ற வேண்டும் என்கிற வகையில் மத்திய அரசின் நடவடிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய வலிமையான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று தான் இந்த இயக்கத்தை முன்னெடுக்க உள்ளது.
அதன்படி 26, 27 ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஒரு கோரிக்கை, மாநில அரசுக்கு தரவேண்டிய வரியை மத்திய அரசு வழங்கினால், அடுத்த நாளே தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கப்படும் என்று தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், மோடி அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் தேசிய அளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்க உள்ளது.
மோடி அரசு சமூக பிளவுக்கு காரணமாக இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த இயக்கத்தில் பங்கேற்க வேண்டும். 25ம் தேதி துண்டு அறிக்கைகள் வழங்கப்பட உள்ளது. 26, 27ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். மீதமுள்ள நாட்களில் பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.