10.5% வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரம்… மீண்டும் சட்டமியற்ற முதல்வரிடம் ராமதாஸ் கோரிக்கை!!
10.5% வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக மீண்டும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். 10.5 சதவீத வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, முதல்வருடனான சந்திப்பு நல்ல முறையில் அமைந்தது. முதல்வரிடம் மீண்டும் 10.5 சதவீத வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
மேலும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தரமான வழக்கறிஞர்களை வைத்து தான் வாதாடியது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு எல்லா சமூகத்திற்க்கும் இருக்கிறது ஆனால் வன்னியர்களுக்கு இல்லை. வன்னியர் இட ஒதுக்கீடு யாருக்கும் பாதகமான இட ஒதுக்கீடு கிடையாது. உச்சநீதிமன்றம் தீர்ப்பில் மாநில அரசுக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது. உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்றும், சாதகமான அம்சங்கள் குறித்தும் முதல்வரிடம் விளக்கமாக சென்னோம். மேலும் புள்ளி விவரம் இருக்கிறது அதனை சேகரித்து சட்டமன்றத்தில் மீண்டும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இதை அடுத்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக தெரிவித்தார்.