சட்டப்பேரவையில், நேரம் இல்லா நேரத்தில், விருதுநகர் பாலியல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீது பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தவறு செய்தவர்கள் அனைவருக்கும் தண்டனையை வழங்கி உள்ளோம், என்றார்.
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.கஸ்டாலின்,விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதாகவும், 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு,தனி நீதிமன்றத்திற்கு மாற்றி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும் என கூறினார்.
மேலும், விருதுநகர் சம்பவத்தை மாடல் வழக்காக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர், பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல் இல்லாமல் குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனை பெற்றுத் தருகிறோம் என்பதை பாருங்கள் என்றும்,வண்ணாரப்பேட்டை 13 வயது சிறுமி பாலியல் வழக்கு போல் இல்லாமல் நிச்சயம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவோம், எப்படி விரைந்து தண்டனை பெற்றுத் தருவது என்பதற்கு இந்தியாவுக்கே இந்த வழக்கு முன்மாதிரியாக இருக்கும், எனவும் உறுதிப்பட தெரிவித்தார்.