
சட்டபேரவையில் 110 விதியின் கீழ் பேசிய அவர், பூம்புகார் கொற்கை அழகன்குளம் உள்ளிட்ட துறைமுக நகரங்களில் சங்க கால பொருட்கள் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், இதேபோல் தமிழ் எழுத்துக்களின் காலம் கிமு ஆறாம் நூற்றாண்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
2600 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ச்சமூகம் சிறந்து விளங்கியது என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், அகழாய்வு தரத்தில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டதற்கான சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும், இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப் பரப்பிலிருந்து தான் தொடங்கப்படும் என்பதை சான்றுகளின் அடிப்படையில் அறிவியல் வாயிலாக உறுதி செய்வதே அரசின் கடமை என்றும் தெரிவித்தார்.