
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும், வாக்காளர்களை உள்ளடக்கி கிராம சபை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு குறிப்பிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கிராம சபை கூட்டங்களும் தேவையின் அடிப்படையில் குறுகிய கால அறிவிப்புகள் மூலம் நடத்தப்பட்டு வருவதாகவும்,
எனவே இத்தகைய கூட்டங்களில் மக்களின் பங்களிப்பு அவசியம் என குறிப்பிட்ட அவர், நடப்பாண்டு முதல் ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் பொது விடுமுறை நாட்களில் நடைபெறும் என தெரிவித்தார். குறிப்பாக மார்ச் 22 தண்ணீர் தினமாக கடைப்பிடிக்கப்படும் என கூறினார்.
அதனுடன் நவம்பர் ஒன்றாம் தேதி உள்ளாட்சிகள் தினமாக மீண்டும் கொண்டாடப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் உள்ளாட்சி மன்ற கூட்டங்களில் பங்கேற்கும் மாவட்ட, ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகளுக்கு அமர்வு படி 10 மடங்கு உயர்த்தி வழங்கப்படும் என்றும்,
இதன் மூலம் கிராம ஊராட்சி தலைவர்கள், 388 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், 36 மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், 1 லட்சத்து 19 ஆயிரம் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பயன்பெறுவார்கள் என ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இதேபோல் தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என உறுதி கூறிய முதல்வர், சிறப்பாக செயல்படக்கூடிய கிராம ஊராட்சிகளுக்கு நடப்பாண்டு முதல் உத்தமர் காந்தி கிராம ஊராட்சி விருது மீண்டும் வழங்கப்படும் என தெரிவித்தார். இதுதவிர சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில், 600 ஊராட்சிகளில் கிராம செயலகம் அமைக்கப்படும் என உறுதி கூறினார்.