
மத, இன கலவரத்தை தூண்டும் வகையில் ஜெய்பீம் படம் எடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு எதிரான புகாரில் வழக்குப் பதிவு செய்ய வேளச்சேரி காவல் ஆய்வாளருக்கு சென்னை சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவிடுள்ளது.
தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா,இயக்குனர் ஞானவேல், கலை இயக்குனர், மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், கவசம் கிளாரட் சபை ரபேல்ராஜ் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயகர் என்பவர் வேளச்சேரி காவல் ஆய்வாளரிடம் 2021 டிசம்பர் 8ல் அளித்த புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், தேச ஒற்றுமையை சீர்குலைக்கவும், தேசப் பிரிவினையை உண்டுபண்ணவும், மக்களிடையே மத சாதி கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கத்தை காட்சிபடுத்தியும், இந்து வன்னியர் சமூகமக்களின் மனதை புண்படுத்தியும்,
அவர்களை இழிவு படுத்தியும், அவர்களை பற்றி பிற மக்களின் மனதில் வெறுப்பை உருவாக்கியும், அவர்கள் வழிபடும் அக்கினி குண்டத்தையும்;
மகாலட்சுமியையும், அவர்கள் வணங்கும் குருவின் பெயரை இழிவுபடுத்தியும்,
வெளிநாட்டு மத மாற்ற நிறுவனங்கள் கொடுத்த பணத்தை நன்கொடை
என்ற பெயரில் பெற்றும், அகரம் அறக்கட்டளை பணத்தை கையாடல் செய்து அந்த பணத்தில் ஜெய்பீம் படத்தை எடுத்தும், அதற்கு விளம்பர செலவாக ஒரு கோடி ரூபாய் காட்டி கிறிஸ்துவ மதமாற்ற நிறுவனங்களுக்கு கொடுத்து அந்நிய
செலவணி குற்றம் செய்தும்; அகரம் அறக்கட்டளையின் நோக்கங்களுக்கு எதிராகவும் குற்றங்கள் செய்திருப்பது ஆகியவை இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டுமென சந்தோஷ் நாயகர் புகார் அளித்தார்.
ஆனால் அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிபதி, புகார் மீது 5 நாட்களில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென ஏப்ரல் 29ல் ஆய்வாளருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், முதல் தகவல் அறிக்கையை மே 20ல் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.