
சென்னை கலைவாணர் அரங்கில், திமுக மாணவர் அணியின் சார்பாக கல்வி, சமூகநீதி கூட்டாச்சித் தத்துவம் குறித்த தேசிய அளவிலான மாநாடு இரண்டாவது நாளாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
மேலும் இரண்டாவது நாளான இன்று 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தின் முதல் உழைப்பாளி தமிழக முதலமைச்சர் தான். நீட் உள்ளிட்ட எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத ஒரு அரசாக மத்திய அரசு இருந்து வருகிறது.
திரிபுராவில் 3500 மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில்,88,000 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 12000 தேர்வு எழுதிய நிலையில் 37000 தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று முடிவுகள் வருகிறது. இதுபோன்று மத்திய அரசே நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ளது.
இதனால் தான் தமிழக முதல்வர் இதை பலிபீடம் என சொல்கிறார், சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர், சில மாணவர்கள் சிறைக்கு செல்கின்றனர். இலவச மருந்துவங்களை அளிப்பதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் மருத்துவத்தை வியாபாரமாக்க வேண்டும் என்று தான் நீட்டை கொண்டு வர முற்படுகிறார்கள்.
நீட் வந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் கல்வி என்பது சீரழிந்து விடும். ஏ.கே.ராஜன் கமிட்டி, 84ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீட் வேண்டாம் என்கிற கருத்தை தான் கூறியுள்ளனர். கல்வியாளர்கள் வைத்து தான் புதிய கல்வி கொள்கையை அமைக்க வேண்டும், ஆனால் அதிகளவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வைத்து மட்டுமே உருவாக்கி உள்ளனர்.
சம்ஸ்கிருத்தை அதிகளவில் வைத்து தான் புதிய கல்வி கொள்கையை உருவாக்கி உள்ளனர். புதிய கல்வி கொள்கை ஆங்கிலத்தில் இருக்கும் போது 23 இடங்களில் சம்ஸ்கிருதம் பற்றி பேசி உள்ளனர். ஆனால் தமிழில் மொழி பெயர்க்கும் போது சம்ஸ்கிருதம் என்ற வார்த்தையே இல்லை.
அப்படி ஒரு மோசடி வேலையை புதிய கல்வி கொள்கையில் அவர்கள் செய்துள்ளனர். தொடர்ந்து 11 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்கள் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் உருவாக்கி உள்ளார் என்று தெரிவித்தார்.