
தேசிய நலவாழ்வு குழுமத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு ரூபாய் 14 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குத்துச்சண்டை வீரர் பாலாஜியை நேரில் சந்தித்து, உடல் நலம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குத்துச்சண்டை வீரர் பாலாஜி என்பவருக்கு பயிற்சியின் போது விபத்து ஏற்பட்டது.
தற்போது விளையாட்டு வீரர்களுக்கான சிகிச்சை பிரிவில் பாலாஜி என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் பொது தேர்வு எழுதிய சிந்து என்ற மாணவியும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விரைவில் அவர்கள் குணமடைவார்கள்.
தேசிய நலவாழ்வு குழுமத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கோரிக்கையின் படி 5, 971 பேருக்கு 32கோடி மதிப்பில் 30% ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. மக்களைத்தேடி மருந்துவம் திட்டத்தில் 4,848 செவிலியர்கள் ஊதியம் 14ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தப்படும்.
அதேபோல் 2,448 முன்களப் பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு 11ஆயிரம் ரூபாயிரத்தில், 3 ஆயிரம் உயர்த்தி 14ஆயிரம் ரூபாயாக வழங்கப்பட உள்ளது. ஒப்பந்தத்தில் பணியாற்றும் மகளிருக்கும் 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.