மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு… விசாரணைக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்!!

முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் உள்ளிட்டோர் மீது முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவங்களில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் தொடர்பிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.

ஸ்டாலினின் இந்த பேச்சு கலைஞர் தொலைக்காட்சியிலும், நக்கீரன் மற்றும் ஜூனியர் விகடன் இதழ்களிலும் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்ந்து தன்னை தொடர்படுத்தி உண்மைக்கு புறம்பான தகவலை ஸ்டாலின் பேசி வருவதால் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தன்னை பற்றி ஸ்டாலின் பேசுவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த இந்த வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், கலைஞர் தொலைக்காட்சி, நக்கீரன் ஆசிரியர் கோபால், ஜூனியர் விகடன் ஆசிரியர் அறிவழகன் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு, இவர்களுக்கு எதிராக கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது.

பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கிலிருந்து தம்மை விடுவிக்கக்கோரி சபரீசன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு, நீதிபதிகள் துரைசாமி, தமிழ்செல்வி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சபரீசன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்றும் எனவே வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதை அடுத்து அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை ஜூன் 10ம் தேதி ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com