மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புங்கள்… வானிலை மையம் அறிவுறுத்தல்!!

தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புங்கள்… வானிலை மையம் அறிவுறுத்தல்!!

வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அசானி புயல் நேற்று மாலை தீவிர புயலாக வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவியது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (09.05.2022) காலை 08:30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.

இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (10.05.2022) வடஆந்திரா -ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக் கூடும். அதன்பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் ஒரிசா கடற்கரை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் படிப்படியாக புயலாக வலுவிழக்கக்கூடும்.

நாளை (10.05.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 11.05.2022 முதல் 13.05.2022 வரை வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். இன்று (09.05.2022) மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை (10.05.2022) மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 85 முதல் 95 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 105 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு ஆந்திர கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் ஆழ் கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com