
சென்னை கோயம்பேட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் இணைந்து திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். இந்த ஆய்வில் ரசாயனம் பவுடர் கலந்து பழுக்கவைக்கப்பட்ட 7.5 டன் மாம்பழங்கள் மற்றும் 900 கிலோ அவக்கோடா பழங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார், சென்னை கோயம்பேட்டில் இன்று அதிகாலை உணவு பாதுகாப்புதுறை மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் எத்திலின் ரசாயன பவுடர் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 7.5 டன் மாம்பழங்கள் மற்றும் அவக்கோடா எனும் பட்டர் ஃபுரூட் 900 கிலோ பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பழங்கள் ஆந்திரா, சேலம் உள்ளிட்ட இடங்களிலிருந்து பழங்கள் காயாக கொண்டு வரப்பட்டு ரசாயனங்கள் மாம்பழங்கள் மீது தெளிக்கப்பட்டுள்ளது. ரசாயனங்கள் வைத்து பழங்களை வைத்திருந்த வியாபாரிகள் மீது முதற்கட்டமாக 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வியாபாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும், மாம்பழங்களில் முழுவதுமாக மஞ்சள் நிறத்திலிருந்தால் அதனை ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழம் என கருதி பொதுமக்கள் வாங்காமல் தவிர்க்க வேண்டும்.
மேலும், மாம்பழங்களில் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் மாம்பழங்களின் மீது புள்ளியாக இருந்தாலும் அதனை இயற்கையாக பழுத்ததாக அடையாளம் கண்டு பொதுமக்கள் வாங்கலாம்.
கடந்த முறை சாயம் கலந்த பச்சை பட்டாணி குறித்து சோதனை மேற்கொண்ட பிறகு கோயம்பேடு சந்தையில் சாயம் கலந்த பச்சை பட்டாணி விற்பனை முழுவதுமாக தடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.