
மருத்துவ கட்டமைப்பை தமிழகத்தில் மேம்படுத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் நாளை மாலை டெல்லியில் சந்திக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்
கொரொனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்த முன்களப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு தொகை வழங்குதல் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பாக நடமாடும் மருத்துவ வாகனம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கும் நிலையில் அதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மருத்துவத்துறையின் புதிய மைல்கல்லாக தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவை கொண்டு சேர்க்கும் வகையில் மருத்துவ கட்டமைபை மேம்படுத்தும் வகையில் 389 நடமாடும் மருத்துவ வாகனம் தொடங்கப்படும் என்று தெரிவித்து இருந்தோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு செவிலியர், ஒரு மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் இருப்பார்கள் என்றார். மேலும், இரண்டு வாகனங்கள் தற்போது தயார் நிலையில் இருக்கிறது மீதமுள்ள வாகனங்கள் கட்டமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது அடுத்த வாரம் இது மக்கள் பயன்பாட்டில் வர உள்ளதாக தெரிவித்தார். ஒரு வாகனம் மாதத்திற்கு 40 முகாம்கள் நடைபெற இருக்கிறது கிராமப்புறங்களில் இதுபோன்ற முகாம்களை நடத்துவதற்கான திட்டமிட்டு இருக்கிறோம் என்றார்.