ஆந்திர மாநிலத்தின் மன்யம் பகுதியில் உள்ள மலை கிராமங்களில் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாததால் கிராம மக்கள் கற்கால மனிதர்களை போல வாழ்ந்து வரும் செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தொலை நோக்குப் பார்வை, டிஜிட்டல் இந்தியா என்றெல்லாம் அரசியல்வாதிகள் மார் தட்டி கொண்டிருக்கும் அதே நேரத்தில், இந்தியாவில் பலர் அடுத்த வேளைக்கு உணவில்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் தவித்து வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் மன்யம் எனும் அடர்வனப்பகுதி, பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. வனப்பகுதியைச் சுற்றி 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள மக்களின் முதன்மைத் தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது.
இந்த கிராமங்களில் மின்சாரம், குடிநீர், சாலைவசதி என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால், கிராம மக்கள் கற்கால மனிதர்களைபோல் வாழ்ந்து வருகின்றனர். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தங்களது வாழ்க்கை தரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என மலைகிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கிராமத்தில் மருத்துவமனை வசதியும், போக்குவரத்து வசதியும் இல்லாததால், 50 கிலோமீட்டர் தொலைவில் அறுக்கு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
முறையான சாலை வசதி இல்லாதததால், மன்யம் வனப்பகுதியிலிருந்து தூளிகள் மூலமாகவே கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் கொண்டு செல்லப்படுகின்றனர். அவ்வாறு தூளிகள் மூலம் தூக்கி செல்லப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு, வனப்பகுதியில் திடீரென மகப்பேறு ஏற்பட்டால், தொப்புள்கொடியை கற்களால் கிழித்து ஆபத்தான முறையில் அழைத்து செல்வதாகவும், இதனால் உயிரிழப்புக்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, அரசு அலுவலர்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்றபோதும் எந்தவித முன்னேற்றமும் இல்லை எனவும், ஆறுகள், ஓடைகள், மேடுகளைக் கடந்து மருத்துவமனைக்கு செல்வது மிகப்பெரிய சவாலாக இருப்பதாகவும் அவர்கள் கண்ணீர் மல்க வேதனை தெரிவிக்கின்றனர். தங்களின் இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு, வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் ஆரம்ப நல்வாழ்வு நிலையங்கள் அமைத்து, சாலை வசதிகளை ஏற்ப்படுத்திட வேண்டும் எனவும் அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வி நியூஸ் 27 செய்திகளுக்காக, ஓசூர் செய்தியாளர் ரமேஷ்.