
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்திற்கு ஏற்ப பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைப்பது வழக்கம். தற்போது, உக்ரைன்-ரஷ்யா இடையேயான போரின் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. ஆனாலும் நாட்டில் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.
ஆனால், 5 மாநில தேர்தல் முடிவுக்கு பிறகு, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் 268 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 2 ஆயிரத்து 406 ரூபாயாக விற்கப்படுகிறது. இதனால் உணவகங்கள், தேநீர் கடை உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனாவால் 40 சதவிகித வியாபாரம் குறைந்த நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருவது சிறு தொழில் முனைவோரை கடுமையாக பாதித்து வருகிறது. இதனிடையே, சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 10 நாட்களில் 9 முறை உயர்த்தப்பட்ட நிலையில் இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் எந்த விதமான மாற்றமும் இன்றி 965 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்டு வருகிறது.