
கிறிஸ்தவ மதத்தின் தேவலயங்களுக்கு சொந்தமான நிலம், சொத்து மற்றும் அவர்களுடைய செயல்பாடுகளை கண்காணிக்க வாரியம் அல்லது அமைப்பை ஏற்படுத்த கோரி தொடரப்பட்ட மனுவை கண்டித்த உச்சநீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
கிறிஸ்தவ மதத்தின் தேவாலயங்கள் தங்களுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்களை தவறான வழியில் பயன்படுத்துவதாகவம் அவர்களுடைய செயல்பாடுகள் பலவும் தவறான வழியில் இருப்பதாகவும் எனவே ஹிந்து கோவல்களை நிர்வகிக்க வாரியம் மற்றும் இஸ்லாமிய மசூதிகளை நிர்வாகிக்க வக்பு வாரியம் போன்றவை இருப்பது போல கிறிஸ்தவ மிஷினரிகளின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க வாரியம் அமைக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை படித்து பார்த்த நீதிபதிகள் இத்தகைய மனுக்கள் சமய மத நல்லிணக்கத்தை சீர் குலைப்பதாக இருப்பதாகவும் இத்தகைய மனுக்கள் வெறும் விளம்பர நோக்கத்திற்காக மட்டுமே தாக்கல் செய்யப்படுகிறது என கடும் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் இந்த மனுவை திரும்பப் பெறவில்லை என்றால் கடுமையான அபராதத்துடன் மனு தள்ளுபடி செய்யப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் மன்றாடிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அபராதம் எதுவும் விதிக்காமல் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.