
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மாவட்ட கலெக்டர்கள் -போலீஸ் சூப்பிரண்டுகளின் ஒருங்கிணைந்த மாநாடு நடத்தப்படாமல் இருந்தது. இப்போது கொரோனா பாதிப்பு பல்வேறு மாவட்டங்களில் இல்லாத நிலை உருவாகி உள்ளது. அதுமட்டுமல்ல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களும் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு விட்டன.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் 3 நாட்கள் மாநாடு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் உள்ள அரங்கில் தொடங்கியது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொள்கின்றனர்.
தமிழக அரசு கடந்த 10 மாதங்களில் புதிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. ஆளுனர் உரை, முதலமைச்சரின் செய்தி வெளியீடுகள், சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கை, வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் என மொத்தம் ஆயிரத்து 704 அறிவிப்புகள் இதுவரை வெளியிடப்பட்டு உள்ளன. அவற்றில் 80 சதவீதத்திற்கும் மேலான அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு, செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மீதமுள்ள அறிவிப்புகளில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் செயல்பாட்டை, ஆட்சியர்கள் மூலமாக அறிந்து கொள்வதற்காகவும், அவற்றை மேலும் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து உரிய அறிவுரைகளை வழங்குவதற்கும் இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். பின்னர் கலெக்டர்களை பேசும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தங்களது மாவட்டத்தில் உள்ள நிலவரங்களை எடுத்துக்கூறினார்கள்.
மாநாட்டில் சட்டம்- ஒழுங்கு, மாவட்ட நிர்வாகம் குறித்தும் அவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். வேறு சிறப்பான திட்டங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை செயலாளர்கள், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இன்று மாலையில் போலீஸ் சூப்பிரண்டுகள், உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து அவர் கேட்டறிகிறார். இதில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்க உள்ளார்.
இன்று தொடங்கிய இந்த மாநாடு வருகிற சனிக்கிழமை (12-ந்தேதி) வரை 3 நாள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் நாளை கலெக்டர்கள் மட்டும் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. நாளை மறுநாள் காலையிலும் கலெக்டர்களுடன ஆலோசனை நடத்துகிறார்.