
ஒரு நோயின் தீவிரத்தன்மையை மக்கள் எப்போது உணர்கிறார்களோ, அப்போது மட்டுமே அதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்கின்றனர்.
இல்லாவிட்டால் நோய் தடுப்புக்கான விதிமுறைகளை சில காலம் கடைபிடித்துவிட்டு, பிறகு அதை அப்படியே மறந்து விடுகின்றனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாம் கொரோனாவை எதிர்கொண்டு வருகிறோம். ஊரடங்கு உத்தரவுகள், தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் வைரஸ் தொற்று போன்ற வார்த்தைகளை கடந்த 3 ஆண்டுகளில் அடிக்கடி கேட்டிருப்போம்.
இத்தகைய சூழலில், கொரோனா தடுப்பூசி வரம் போல அமைந்தது. நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அது மேம்படுத்தியதோடு மட்டுமல்லாமல், கொரோனா 3ஆவது அலையை கட்டுக்குள் கொண்டு வரவும் அது உதவிகரமாக இருந்தது.
கோவிட் பாதிப்பு என்பது கொரோனா வைரஸ் மூலமாக ஏற்படுகிறது. அதே சமயம், சளிக் காய்ச்சல் என்பது 4 வகையான சீதோஷ்ண வைரஸ் மூலமாக ஏற்படுகிறது.
ஆகவே, முறையான மருத்துவப் பரிசோதனை செய்யாமல், ஒரு நபருக்கு எந்த வகையான தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை சரியாக சொல்லிவிட முடியாது.
அதே சமயம், இரண்டு நோய்களுக்கு எதிராகவும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமானது. இருமல், மூக்கில் நீர் வடிதல், தொண்டை வலி, காய்ச்சல், தலைவலி, தலைச்சுற்றல் ஆகியவை இந்த இரண்டு நோய்களுக்குமான பொதுவான அறிகுறிகள் ஆகும்.
தொற்று பாதித்த நபர்களின் இருமல், தும்மல், மூச்சுக்காற்று போன்றவற்றின் மூலமாக வெளியேறும் இந்த வகை வைரஸ்கள், எதிரே உள்ள நபரின் மூக்கு, கண்கள் அல்லது வாய் வழியாக உள்நுழைந்து அவர்களையும் தாக்குகிறது.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள விதிமுறைகளின்படி சில நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாக இந்த இரண்டு நோய்களில் இருந்தும் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும். சுமார் ஒரு மீட்டர் அளவுக்கு தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கூட்டமான பகுதிகளை தவிர்க்க வேண்டும்.
கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்து, முறையான காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்வதுடன், அறிகுறிகள் தென்பட்டால் உடனடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.