
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுக்கத்தை எதிர்த்து நாடுமுழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தலைநகர் டெல்லி வழக்கம் போல் இயங்கி வருகிறது.
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு தொழிலாளர்கள் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இன்று முழு அடைப்பு மற்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மேற்குவங்க மாநிலத்தில் பொது போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது;
முக்கியமான வணிக நிறுவனங்கள் அடங்கியுள்ள பகுதிகள் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மேற்குவங்கத்தில் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதேபோல் தமிழகம்,கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பொதுப்போக்குவரத்து மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வங்கி ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் வங்கிகளும் முழுமையாக மூடப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
தலைநகர் டெல்லியை பொருத்தவரை பந்த் நடைபெறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல், வழக்கம்போல பேருந்து மற்றும் ரயில்கள் உள்ளிட்டவை இயக்கப்படுகிறது. இதை போல் தனியார் வாகனங்களான கால் டாக்ஸி, ஆட்டோ,இ-ரிக்ஷா உள்ளிட்டவையும் வழக்கம்போல் இயக்கப்படுகிறது. இருப்பினும் பஞ்சாப் நேஷனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகளின் சேவைகள் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது.