
கடந்த 11 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்த பெட்ரோல் & டீசல் விலையை ஒப்பிட்டு ராகுல்காந்தி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பிரதான் மந்திரி ஜன் தன் லூட் யோஜனா" என பதிவிட்டுள்ளார்; அதாவது மக்களிடமிருந்து பிரதமர் திருடுகிறார் என்பதே இதன் பொருளாகும். மேலும் 2014ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் டேங்க் முழுவதுமாக நிரப்புவதற்கு 714 ரூபாய் தேவைப்பட்ட நிலையில் இன்று 324 ரூபாய் அதிகரித்து 1,038 தேவைபடுவதாகவும்,காரின் எரிபொருள் டேங்க் நிரப்புவதற்கு 2014ம் ஆண்டு 2,856 ரூபாய் தேவைப்பட்ட நிலையில் இன்று 4,152 ரூபாய் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். விவசாய பணிகளுக்கு பெரிதும் உதவும் டிராக்டரில் எரிபொருள் நிரப்ப 2014ம் ஆண்டு 2,749 ரூபாய் செலவான நிலையில் இன்று 1,814 ரூபாய் அதிகரித்து 4,563 ரூபாய் தேவைப்படுவதாகவும், வணிக பயன்பாட்டிற்கு பெரிதும் உதவும் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் எரிபொருள் முழுமையாக நிரப்ப 2014ம் ஆண்டு 11,456 ரூபாய் தேவைப்பட்ட நிலையில் இன்று 7,558 ரூபாய் அதிகரித்து 19,014 ரூபாய் தேவைப்படுவதாகவும் பதிவிட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருவதும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதும் இந்நேரத்தில் குறிப்பிடத்தக்கது.