
2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் இரண்டாம் கட்ட விழா இன்று மாலை 5 மணி அளவில் குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் நடைபெறுகிறது. மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வணிகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகள்செயல்பாடுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
2022ம் ஆண்டிற்கான 2-ம் கட்ட பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்க உள்ளார். இன்றைய தினம் டாக்டர் பிரபா அத்ரே, மறைந்த உத்தர பிரதேச மாநில முதல்வர் கல்யாண் சிங் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், ஸ்ரீ விக்டர் பானர்ஜி, மறைந்த டாக்டர். சஞ்சய ராஜாராம் , டாக்டர். பிரதிபா ரே மற்றும் ஆச்சார்யா வசிஷ்ட திரிபாதி மற்றும் டாக்டர். கிருஷ்ண மூர்த்தி எல்லா மற்றும் சுசித்ரா கிருஷ்ணா எல்லா ஆகியோருக்கு பத்மபூஷன் விருதுகள் இன்று மாலை டெல்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட இருக்கிறது. இதேபோல தமிழகத்தைச் சேர்ந்த பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, பிரபல மருத்துவர் வீராசாமி சேஷய்யா, சமூக செயற்பாட்டாளர் எஸ்.தாமோதரன், தவில் இசைக்கலைஞர் கொங்கம்பட்டு ஏ.வி.முருகையன் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகளை இன்று மாலை டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவிக்கிறார்.