
உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழம், ஊதா மாம்பழம் அல்லது மியாசாகி மாம்பழம் ஆகும். ஜப்பானில் உள்ள மியாசாகி நகரில் பயிரிடப்படும் உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழம், சர்வதேச சந்தையில் ஒரு கிலோ சுமார் ரூ.2.70 லட்சம் என்ற அளவில் விற்கப்படுகிறது.
காயாக இருக்கையில் முக்கால்வாசி பர்பிள் நிறத்திலும் நுனிப்பகுதியில் கொஞ்சம் பச்சை நிறமும் சேர்ந்து பார்ப்பதற்குக் கொள்ளை அழகாக இருக்கிற மியாசாகி, பழுக்கும்போது சிவப்பு நிறத்துக்கு மாறிவிடுகிறது. அதனால், இந்த மாம்பழத்துக்கு `சூரியனின் முட்டை’ என்கிற பட்டப்பெயரும் இருக்கிறது.
இது டைனோசரின் முட்டைகள் போன்ற தோற்றத்தில் இருக்கும். அதன் அடர் சிவப்பு நிறம் தோற்றத்தின் காரணமாக, மியாசாகி மாம்பழங்கள் டிராகன் முட்டை என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த மாம்பழங்கள் 350 கிராம் எடையுடன், 15 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான சர்க்கரையையும் கொண்டுள்ளது.
மியாசாகி மாம்பழங்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு ஜப்பான். மியாசாகி மாம்பழங்கள் முக்கியமாக ஜப்பானின் கியூஷு மாகாணத்தில் உள்ள மியாசாகி நகரில் வளர்க்கப்படுகின்றன. மியாசாகியில் இந்த மாம்பழத்தின் உற்பத்தி 70 மற்றும் 80 களில் தொடங்கியது.
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள ஒரு தம்பதியினர் தங்கள் தோட்டத்தில் இரண்டு மியாசாகி மா மரங்களை நட்டுள்ளனர்.
அவர்கள் ரயில் பயணத்தின் போது சென்னைக்கு பயணித்த ஒருவரிடமிருந்து மரக்கன்றுகளை பெற்றதாக கூறப்படுகிறது. அவர்கள் மரக்கன்றுகளைப் பெற்ற நேரத்தில், இது உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழம் என்பது அவர்களுக்குத் தெரியாது.
பின்னர் அவர்கள் மாம்பழத்தின் நிறம் வித்தியாசமாக இருப்பதைக் கண்டறிந்தனர், இறுதியில் அவர்கள் உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழங்களை பயிரிட்டுள்ளனர் என்பதை அறிந்து இப்போது அந்த மாம்பழங்களை ‘தாமினி’ என்று பெயரிட்டுள்ளனர்.