தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த அதிகாரி சஸ்பென்ட்...

தேர்தல் ஆணையம் விளக்கம்
தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த அதிகாரி சஸ்பென்ட்...

மதுரை டி.கல்லுபட்டி பேரூராட்சி 10 வது வார்டு தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும், சரியான தேர்தல் முடிவை அறிவித்து விட்டதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது.*

மதுரை மாவட்டம், டி.கல்லுபட்டி பேரூராட்சிக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மாதம் 22ம் தேதி எண்ணப்பட்டன. பேரூராட்சியின், 10 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும், சுயேட்சையாக போட்டியிட்ட பழனிச்செல்வியும் தலா 284 வாக்குகளை பெற்றனர்.

இதனால் குலுக்கல் மூலம் வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பழனிச்செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இதுசம்பந்தமாக தேர்தல் அதிகாரி பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க கோரி பழனிச்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, குலுக்கல் நடந்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை பார்வையிட்டு, தேர்தல் முடிவை மாற்றியது நிரூபணமாகியுள்ளதாகக் கூறி, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், தேர்தல் அதிகாரியை ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும், திமுக வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, டி.கல்லுபட்டி பேரூராட்சி 10 வது வார்டு கவுன்சிலராக மனுதாரர் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தேர்தல் அதிகாரி, திமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் அளித்த அழுத்தம் காரணமாக முடிவை மாற்றி அறிவித்ததாக தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், அழுத்தம் குறித்து மனுவாக தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com