
சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்த ஜெயந்த் என்ற இளைஞர் அதே பகுதியில் உள்ள அவரது முன்னாள் காதலி வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அதனை கண்ட அந்தப் பெண்ணின் தந்தை ஜெயத்தை பிடித்து கேகே நகர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தார்.
இதனை விசாரிப்பதற்காக உதவி ஆய்வாளர் செந்தில் என்பவர் அந்த இளைஞரை அழைத்து பேசிய போது ஜெயந்த் உதவி காவல் ஆய்வாளரை மரியாதைக்குறைவாக பேசியுள்ளார். இதில் கோபமடைந்த உதவி ஆய்வாளர் செந்தில் அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு உள்ளே அழைத்துச் செல்ல முயன்றபோது உதவி ஆய்வாளர் செந்திலை கடுமையாக தாக்கினார்.
இதில் முகத்தில் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் செந்தில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த காவல் உயரதிகாரிகள் அந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில், ஜெயந்த் ஓர் ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சை முடிந்து நேற்று அவரது வீட்டுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளரை தாக்கிய அந்த இளைஞர் மீது கே.கே நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.