
சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 29 வயது மாணவி ஆராய்ச்சி படிப்பை படித்து வந்தார். இவர் படிக்கும் காலத்தில் கடந்த 2018ம் ஆண்டு முதல், அதே துறையில் படித்த மாணவர்கள் அந்தத் துறையின் கோ கைடுகள், பேராசிரியர்கள் என 9 பேர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமைகளை செய்ததாக அளித்த புகாரைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவர்கள், பேராசிரியர் என 9 பேர் மீது மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ள கிங்சோ தேப்சர்மாவை இந்த வழக்கு தொடர்பாக நேரடியாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் அவர் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் விசாரணையில் இரண்டு வார கால அவகாசம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் அடுத்த கட்டமாக, பாதிக்கப்பட்ட மாணவி ஐஐடி சார்பில் கர்நாடக மாநிலம் கூர்க் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தபோது அங்கு வைத்து தன்னை, உடன் படித்த மாணவர்கள் கோ கைடுகள் ஆகியோர் பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
அதனடிப்படையில் மயிலாப்பூர் தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் கூர்க் சென்று விசாரணையை துவக்கி உள்ளனர். அவர்கள் சென்ற இடம் மாணவியுடன் வந்தவர்கள் யார் யார் என்பது குறித்து அந்த பகுதி உள்ள ஆதாரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு தனிப்படை போலீசார் சென்னை ஐஐடி வளாகத்தில் பாதிக்கப்பட்ட மாணவியுடன் படித்த மாணவிகள் மாணவர்கள் பேராசிரியர்கள் உட்பட ஒவ்வொருவரிடமும் தனித்தனியான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.