
சென்னை மெரினா கடற்கரை சாலையில் கடந்த 19ஆம் தேதி 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இதனையடுத்து அனைத்து காவல் நிலைய போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு பைக் சாகத்தில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்ய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார்.
அதனடிப்படையில் மெரினா கடற்கரையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பைக் சாகசத்தில் ஈடுபடுவதும், இரவு நேரங்களில் குழுக்களாக பிரிந்து ஈ.சி.ஆர், ஓ
எம்.ஆர், மெரினா கடற்கரை சாலைகளில் பைக் சாகசத்தில் ஈடுபடுவது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து இரவு நேரங்களில் முக்கியமான சாலைகளில் பேரிகார்டு அமைத்தும், மேம்பாலங்களை மூடி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி கடந்த 10 நாட்களில் மட்டும் பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 37 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுவர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டால் அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர் மீது வழக்குபதிவு செய்யப்படும் என போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்களின் கைது நடவடிக்கை தொடரும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அதிக சத்தம் எழுப்பக்கூடிய வாகனங்களை தயார் செய்து தரக்கூடிய மெக்கானிக் கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளபடும் எனவும் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.